பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் ஏற்றிய ஞான ஒளியில், திருக்கோவலூர் இடைக்கழியில் நெருக்கிக்கொண்டிருந்த அந்த நான்காவது நபர் யார் என்பதைப் பேயாழ்வார் தரிசித்தார். திருமால் சங்கு சக்கரதாரியாய், திருமகளோடு பேரழகுடன் அங்கு எழுந்தருளியிருப்பதை அவர் கண்கள் குளிரக் கண்டார்.
இறைவனின் அந்தத் திவ்ய தரிசனத்தைக் கண்டவுடன் பேயாழ்வாருக்குப் பேரின்பத்தால் பித்துப் பிடித்தது போல் ஆனது. அதனால்தான் அவருக்கு ‘பேயாழ்வார்’ என்ற பெயரே அமைந்தது. தான் கண்ட காட்சியை உலகோருக்கும் சொல்ல விரும்பி,
“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன்…”
என்று பாடத் தொடங்கினார். “நான் திருமகளைக் கண்டேன், பெருமானின் பொன்னான திருமேனியைக் கண்டேன், சூரியனைப் போன்ற அவனது பிரகாசத்தைக் கண்டேன், போர் செய்யும் சக்கரத்தையும், அழகிய சங்கையும் கண்டேன்” என்று தான் தரிசித்த பெருமானின் அழகை வர்ணித்துப் பாடினார். முதலழ்வார்கள் மூவரும் இவ்வாறு ஒன்றிணைந்து பாடிய இடமே திருக்கோவலூர், இதுவே நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் தொடக்கமாகவும் அமைந்தது.